Showing posts with label ஸ்ரீ சித்தானந்த சுவாமிகள் வரலாறு பகுதி-2. Show all posts
Showing posts with label ஸ்ரீ சித்தானந்த சுவாமிகள் வரலாறு பகுதி-2. Show all posts

Saturday, May 18, 2013

சற்குரு ஸ்ரீ சித்தானந்த சுவாமிகள்


ஸ்ரீ சித்தானந்த சுவாமிகள் வரலாறு

                            பகுதி-2


முத்தியால்பேட்டையில் வசித்து வந்த முத்தைய முதலியார்,
சொக்கலிங்க முதலியார் போன்றோர்-சுவாமிகள் மேல் தீராத
பக்தியுடன் பூஜித்து வந்தனர்.சித்தரை பூஜித்தால்
சிவனையே பூஜித்தது போல் அல்லவா?
சுவாமிகளும் அவர்தம் இல்லங்களுக்கு
சென்று ஆசி வழங்குவார்.
ஒரு முறை முத்தைய முதலியாரின் மனைவி,பிரசவ வலியால்
துடித்துக் கொண்டிருப்பதை கண்டு-பொறுக்க மாட்டாமல், முதலியார், சுவாமிகளை தேடி
ஓடினார்.சுவாமிகளிடம் முறையிடும் முன்பே,முதலியாரின் உணர்வை
புரிந்து கொண்ட சுவாமிகள்,”கவலை படாதே ,உனக்கு ஆனந்தம்
தரும் ஆனந்தன் பிறந்து விட்டான்,சென்று பார்என்று ஆசிர்வதித்து
அனுப்பினார்.
எங்கு, எது நடக்கிறது என்பதை ஞானக் கண்ணால் காணும்
பேராற்றல் படைத்தவர் சுவாமிகள்.
சுவாமிகள் சொன்னதை கேட்டு சந்தோஷம் கொண்ட
முதலியார் வீட்டிற்கு சென்று பார்த்தார்.அங்கு தாயும் சேயும்
நலமாக இருப்பதைக் கண்டு பெருமகிழ்ச்சியடைந்தார்.
ஆனந்தக்கண்ணீர் மல்கினார்.சுவாமிகளின் ஞான வாக்கு
அப்படியே நடந்ததை கண்டு பூரிப்படைந்தார். சுவாமிகளின்
திருவாக்கு படியே தம் மகனுக்குஆனந்தன்என்று பெயரிட்டார்.
 
ஒரு நாள் முத்துசாமி என்னும் பக்தர் இல்லத்திற்கு,நெல்லித்தோப்பு
வழியாக சுவாமிகள் சென்று கொண்டிருந்த பொழுது,
குடிகாரன்  ஒருவன் சுவாமியை கிண்டல் செய்து வம்புக்கு இழுத்தான்.
சுவாமியையும் சாராயம் குடிக்கச் சொல்லி வற்புறுத்தினான்.
சுவாமிகள் அதனைக் கண்டு நடுங்கவில்லை.

                   ஒடுங்கி நிலைபெற்ற உத்தமர் உள்ளம்
                   நடுங்குவ தில்லை நமனும் அங் கில்லை
                   இடும்பையும் இல்லை இராப்பகல் இல்லை
                   படும்பயன் இல்லை பற்றுவிட் டோர்க்கே
                                                                                                --திருமூலர்

சுவாமிகள் சாராயம் பருகினார்.நிறைய பருகினார்.
பருக பருக குடிகாரனுக்கு போதை ஏறியது,
மேலும் மேலும் சுவாமிகள் சாராயம் பருக,குடிகாரன்
போதை தலைகேறி மயங்கி கீழே விழுந்தான்.
சுவாமிகள் சிரித்துக்கொண்டே சென்று விட்டார்.
பலமணியாகியும் குடிகாரன் எழுந்திருக்கவில்லை.
உறவினர்கள் கலங்கினர்,கண்ணீர் விட்டனர்,கதறி அழுதனர்.
பின் செய்வதறிந்து சுவாமிகளை கண்டு குடிகாரனை
மன்னிக்கும் படி மன்றாடினர். கருணையே உருவான சுவாமிகள்
அங்கு சென்று அவனை மன்னித்தார்.மயக்கம் தெளிந்து எழுந்த
குடிகாரன் தன் தவறை உணர்ந்து
சுவாமிகளின் காலில் விழுந்து,அழுது மன்னிப்பு கேட்டான்.
சுவாமிகளும் அவனுக்கு ஆசி வழங்கினார்.
                                                                                                                
ஆண்டுகள் பல கடந்தன. சுவாமிகளின் ஆத்மீக சாதனை
முடியும் நேரம் வந்து விட்டதை உணர்ந்தார். ஸ்ரீ பாடலீஸ்வர பெருமானின்
திருக்கட்டளைக்காக காத்திருந்தார்.
திடீரென்று ஒரு நாள் முத்துக்குமாரசாமி பிள்ளையை அழைத்து
ஏவிளம்பி ஆண்டு வைகாசி மாதம்  அன்று
எனக்கு கல்யாணம் நடக்கப் போகிறது-இதை எல்லோரும் அறியும்படி
செய்என்றார்.இந்நிகழ்ச்சி சித்தர் சமாதி அடைய பத்து நாட்களுக்கு
முன் நடந்தது.
நாட்கள் நகர்ந்தன.தாம் உபயோகித்த பாத குறடையும்,கைத்தடியையும்
சொக்கலிங்க பிள்ளையிடம் கொடுத்து விட்டார்.
அன்று பத்தாம் நாள்.சுவாமிகளுக்கு அபிஷேகம் நடந்தது.
கற்பூர ஆராதனை நடந்தது. கற்பூர தீபம் ஜெக ஜோதியாக
உயர்ந்து உயர்ந்து எரிந்தது. தீப ஒளியில் சுவாமிகளை
அந்த சிவனாகவே கண்டனர்-பக்தர்கள்.

எங்குந் திருமேனி எங்குஞ் சிவசக்தி
எங்கும் சிதம்பரம் எங்குந் திருநட்டம்
எங்குந் சிவமாயிருத்தலால் எங்கெங்கும்
தங்குஞ் சிவனருள் தன் விளையாட்டத்தே
                                                                         -திருமந்திரம்

ஓம் ஸ்ரீ சித்தானந்த சுவாமிகள் ஒரு பெரிய மகான்,ஆத்ம ஞானி
என்ற சிந்தனையை மறந்து-பிரபஞ்சத்தை படைத்த பரம்பொருளாகவே
நினைவில் கொண்டு வணங்கினார்கள்.கண்ணீர் மல்க வணங்கினார்கள்.
  பத்மாசனத்தில் அமர்ந்த சுவாமிகள் அப்படியே உள்ளாழ்ந்தார்.
பிராணன் பிரம்மக் கூட்டை விட்டு விலகியது.
அன்று 25-05-1837-ம் ஆண்டு வைகாசி மாதம் 15-ம் நாள் ஆகும்.
ஆத்ம சாதகர்கள்
சுவாமிகளின் பிரம்மத்தை தரிசித்தார்கள்.தங்களையே மெய்மறந்தார்கள்.
 கருவடிகுப்பத்தில்-முத்துகுமாரசாமி தோட்டத்தில் -சுவாமிகள்
சுட்டி காட்டிய இடத்தில்-சமாதி கட்டப்பட்டு-சிவலிங்கம் பிரதிஷ்டை
செய்யப்பட்டது.தற்பொழுது சுவாமிகளின் சமாதி ஒரு சிறந்த சிவாலயமாக
காட்சியளிக்கிறது.ஆண்டு தோறும் வைகாசி மாதம் 15-ம் நாள்
சற்குரு நாதரின் குருபூஜை விழா சிறப்பாக நடத்தப் படுகிறது.
ஆத்ம சாதகர்கள் தியானத்திற்காகவும்,பக்தர்கள் மன அமைதி
வேண்டியும் இங்கு வருகின்றனர்.நெறியான வேண்டுகோள்கள்
நிறைவேறுவதை எல்லோரும் கண் கூடாக காண்கிறார்கள்.